• உரைப்பாயிரம்
  • உரைப்பாயிரம் 2
  • உரைப்பாயிரம்3
  • கடவுள் வாழ்த்து பாயிறம்
navigate_next
சங்கக் கடவுளும், வள்ளுவக் கடவுளும்

திருக்குறளின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களில் `அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளோடு தொடங்கும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரம். தெய்வத்தை வாழ்த்திப் போற்றித்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறள் என்கிற ஒப்புவமை அற்ற புனித நூலைத் தொடங்குகிறார். 


தெய்வ நம்பிக்கை என்பது நம் தமிழின் மிகப் பழைய இலக்கியப் புதையலான சங்கப் பாடல்களிலேயே தென்படுகிறது. ஆனால், நம் பழைய இலக்கியங்களில் தெய்வத்தை மறுத்துப் பேசும் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. மிக மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் எந்தெந்த நிலப்பரப்புக்கு  எந்தெந்த தெய்வம் என்று வகைப்படுத்தியுள்ளது. 


`மாயோன் மேயக் காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் 
வருணன் மேயப் பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.’


எனத் திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களுக்கான நிலப்பகுதியைத் தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகுத்துப் பழந்தமிழர்கள் வழிபாடு நிகழ்த்தியிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழம்புலவர் தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றிப் புகழ்கிறார்.  


`தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளி
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே’ 

இந்தப் பாடலில் முருகக் கடவுளின் தோற்றம், கொடி, ஆயுதம் முதலிய அனைத்தும் 
சொல்லப்படுகின்றன. 

சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள நக்கீரர் எழுதிய `திருமுருகாற்றுப் படை’யும் முருகன் புகழ்பேசும் இலக்கியமே. இன்னும் சங்க இலக்கியத்தில் தென்படும் பக்திக் கூறுகள் பல. சங்க காலத்தை ஒட்டிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகத் திருக்குறள் பரவலாகக் கருதப்படுகிறது. `நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால்கடுகங் கோவை பழமொழி நானூறு இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பதூஉங்கைந்நிலையுமாம் கீழ்க் கணக்கு’ என்கிற பழைய வெண்பா, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாக முப்பால் என்கிற திருக்குறளை வரிசைப்படுத்துகிறது. 


என்ன ஆச்சரியம்! சங்கப் பாடல்களில் தெய்வத்திற்கு இன்ன வடிவம், இன்ன நிலம் என்றெல்லாம் தெளிவான அடையாளம் கொடுக்கப்பட்டாலும் வள்ளுவரின் கடவுள் பற்றிய சிந்தனைகள் அப்படிப்பட்ட எந்த அடையாளமும் இல்லாமல் அமைந்து  நமக்கு அளவற்ற வியப்பைத் தருகின்றன.

 

வள்ளுவர் கடவுளின் பெயரையோ, கடவுள் ஆணா பெண்ணா என்பதையோ, நெற்றிக் குறியையோ, கை ஆயுதத்தையோ, வாகனத்தையோ எங்குமே குறிப்பிடவில்லை. பொதுவாக அந்த தெய்வீக சக்தியின் பெருமைகளை மட்டுமே குறிப்பிடுகிறார். சங்கக் கடவுளுக்கும் வள்ளுவக் கடவுளுக்கும் தான் எத்தனை வேறுபாடு! கற்றலின் பயனே கடவுளைத் தொழுவதுதான் என்பது வள்ளுவரின் வலிமையான கருத்து. நாத்தழும்பேற நாத்திகம் பேசுவதை வள்ளுவம் ஒப்புக்கொள்ளவில்லை.  `கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்’வள்ளுவர் கடவுளை எட்டுக் குணங்கள் உடையவராகக் காண்கிறார். 


`கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.’கடவுளின் அந்த எட்டுக் குணங்கள் எவை? தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பொருளுடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பிலாத இன்பமுடைமை என அந்தக் குணங்கள் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளன. 


வள்ளுவர் எட்டுக் குணங்கள் உடையவன் எனக் கடவுளைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் குறளாக உள்ளது. எனவே இதற்கு முந்தைய எட்டுக் குறள்களிலும் வள்ளுவர் சொல்லும் குணங்களே கடவுளின் எண்குணங்கள் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆதி பகவனாயிருத்தல், வாலறிவனாயிருத்தல், மலர்மிசை ஏகியவனாய் இருத்தல், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாய் இருத்தல், இருள்சேர் இருவினை சேராதவனாய் இருத்தல், பொறிவாயில் ஐந்தவித்தவனாயிருத்தல், தனக்குவமை இல்லாதவனாய் இருத்தல், அறவாழி அந்தணனாய் இருத்தல் என்பதாக அந்த எட்டுக் குணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. 

 

மத நல்லிணக்கத்தைப் பற்றி உரத்துக் குரல் எழுப்பப்படும் இந்தக் காலத்தில் நாம் பின்பற்றத் தக்க சமயம் என்பது வள்ளுவர் கூறும் சமயமே. ஜாதிச் சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகிற இன்றைய தருணத்தில் வள்ளுவப் பேராசானே நமக்குச் சரியாக வழிகாட்டக் கூடியவர். அவர் சுட்டிக்காட்டும் கடவுளே நம் அனை வருக்கும் ஏற்புடைய கடவுள். 


`வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?’- என்ற மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் கேள்விதான் எத்தனை தர்க்க பூர்வமானது!நாம் எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் வள்ளுவர் கூறும் லட்சிய சமயத்தை நோக்கிச் செல்லும் பாதையாக நம் சமயத்தைக் கொள்வது நல்லது. சமயச் சச்சரவுகளும் சண்டைகளும் வராதிருக்க வள்ளுவர் வகுத்த வழியே நல்ல வழி. சரியான வழி.


வள்ளுவர் சமயம் கடந்த ஆன்மிகத்தையே பேசினாலும், ஒவ்வொரு சமயத்தாரும் வள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் எனக் கூற ஆசை கொண்டார்கள். வள்ளுவத்தில்  இந்திரனைப் பற்றிய கதை வருகிறது. `ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளோர் கோமான் இந்திரனே சாலும் கரி’- என்ற குறளில் கெளதமர் அகலிகைமேல் இச்சை கொண்ட இந்திரனைச் சபித்த நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இதுபோன்ற குறள்களைக் காட்டி வள்ளுவர் இந்துவே என நிறுவ முயல்வோர் உண்டு.

 
வள்ளுவத்தின் முதல் குறள்,

 `அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
 பகவன் முதற்றே உலகு!’ 


- என்பது. இதில் வரும் `ஆதிபகவன்` என்ற சொற்றொடர், சமணர்களில் முதல் தீர்த்தங்கரரின் பெயர். வள்ளுவம் எழுதப்பட்ட காலத்தில் பெரும் புரட்சிக் கருத்தாகக் கருதப்படக் கூடியது புலால் மறுப்பு என்கிற கோட்பாடு. 

 

`கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும் தொழும்!’ 

- என்கிறது வள்ளுவம்.  

சைவ உணவு என்பது சமணர்களின் மேலான ஒரு கோட்பாடு. வள்ளுவம் சைவ உணவைப் போற்றுவதாலும் ஆதிபகவனைக் குறிப்பிடுவதாலும் வள்ளுவர் தங்கள் சமயத்தவராக இருக்க வேண்டும் எனச் சமணர்கள் கருதுகிறார்கள். சென்னை வந்தவாசி அருகே குந்த குந்தர் மலை என்றொரு சிறிய குன்று இருக்கிறது. அந்தக் குன்றின்மேல் சமணத் துறவியான குந்த குந்தருக்குச் சமாதி உள்ளது. அந்தக் குந்த குந்தரே வள்ளுவர் என்பது சமணர்களின் நம்பிக்கை. குந்த குந்தர் மலையை ஒட்டித் திருக்குறள் மணிமண்டபம் ஒன்று எழுப்பப்பட்டு அதில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப் போல் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தில் திருக்குறள் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.


சங்க காலத்தில் ஒரு தெய்வத்தை வழிபட்டவர்கள் மற்ற தெய்வத்தை வழிபட்டவர்களோடு சண்டை செய்ததில்லை. அவரவர் தெய்வம் அவரவருக்கு என வாழும் நல்லிணக்கப் போக்கு அன்று நிலவியது. ஆனால், இடைக்காலத்தில் சமயம் சார்ந்த சண்டைகள் ஏற்படத் தொடங்கிவிட்டதையும் அந்தச் சண்டைகளை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதையும் காண்கிறோம். 


அண்மைக்காலத்தில், கடந்தகால வரலாறுகளை ஆய்வுசெய்து சரித்திர நாவல்கள் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, அன்றைய சமயச் சண்டைகளையும் கூடத் தம் புகழ் பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவலில் சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார். `நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர். ஆனால், ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தானே?’ எனப் பெருமை பேசுகிறான் சைவன் ஒருவன். அதற்கு வைணவனான ஆழ்வார்க்கடியான்  பதில் சொல்கிறான்: ‘‘ஆமாம். கெளரவர்கள் நூறுபேர். பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான்!’’


இடைக் காலத் தமிழகம் திருவள்ளுவரின் சமயங் கடந்த ஆன்மிக நெறியைப் பின்பற்றியிருந்தாலோ சங்க காலத்தைப்போல் சமய நல்லிணக்கத்தைப் போற்றியிருந்தாலோ இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. சைவர்கள் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார்கள் என்பது இடைக்காலத்தில் கிடைக்கும் செய்தி. அதை எட்டாயிரம் என்று கூறுபவர்கள் உண்டு. அல்லாமல் எண்ணாயிரம் என்ற பெயருள்ள கிராமத்தில் இருந்த சமணர்கள் என்று விளக்கம் தருபவர்களும் உண்டு. மதச் சண்டை காரணமாக ஒரே ஒரு சமணர் கழுவேற்றப் பட்டாலும் அது எப்படி ஆன்மிகமாகும்? கொலை செய்வதா ஆன்மிகம்? அடுத்த மதத்தவரையும் மனமாற நேசிக்கும் உயர்ந்த அன்பே ஆன்மிகம். மதங்களிலெல்லாம் சிறந்த மதம் அன்புதான்.


`அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்திலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் . 
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!’

- என்கிறது திருமூலரின் திருமந்திரம்.  

தெய்வ சக்திக்கு வடிவம் கொடுத்து வழிபடுவது தவறல்ல. ஆனால்,  நாம் வழிபடும் அதே தெய்வ சக்திதான் பிற மதத்தவர்களால் வேறு வேறு வடிவத்தில் வழிபடப்படுகிறது என்பதையும் வடிவமே இல்லாமலும் வழிபடப்படுகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தண்ணீர் எந்தப் பாத்திரத்தில் இருக்கிறதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொண்டு அதே வடிவத்தில் காட்சி தருவது மாதிரிக் கடவுள் சக்தியும் தம் அன்பர்கள் விரும்பும் வடிவங்களை ஏற்கிறது என்பதே உண்மை. 


ராமகிருஷ்ண பரமஹம்சர், `மதங்களெல்லாம் நதிகள் மாதிரி. எல்லா நதிகளும் கடலிலேயே கலக்கின்றன. அதுபோல் எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற கடலிலேயே சென்று சேர்கின்றன!’ என மதங்களின் தத்துவப் பின்னணியை விளக்கினார். தாம் இந்து மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள் உள்பட எல்லா மதங்களின் நெறியிலும் சாதனை செய்து அனுபூதி பெற்றவர் மகான் ராமகிருஷ்ணர். 


ஷீர்டி பாபா இந்து முஸ்லீம் நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர். அவரைப் போன்றே இந்து முஸ்லீம் நல்லுறவுக்காகப் பாடுபட்ட இன்னொருவர் கபீர்தாசர். அவரை இந்துக்கள், முஸ்லீம்கள் என இருதரப்பினரும் திட்டினர். இப்படி உங்களைத் திட்டுகிறார்களே என்று கபீர்தாசரிடம் கேட்டதற்கு `என்னைத் திட்டுகிற விஷயத்திலாவது அவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்களே, அதுபற்றி எனக்கு சந்தோஷம்!’ என்றார் அவர்!


அறிஞர் அண்ணாதுரை பெரியாரின் முழுமையான நாத்திகக் கருத்திலிருந்து மாறுபட்டு, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கோட்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். இந்த வரி திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது. கடவுள் பற்றிய கருத்தைச் சொல்லி, அந்தக் கடவுளின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் விட்ட திருக்குறள், பெரும் படிப்பாளியான அண்ணாதுரையைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். திருமூலரின் கருத்து திருவள்ளுவரின் கருத்தோடு இணைந்து செல்லக் கூடியது. அண்ணா எடுத்துக்காட்டிய வரி திருமந்திரத்தில் இருந்தாலும் அந்தக் கருத்து திருமந்திரம் எழுதப்படுவதற்கு வெகுகாலம் முன்னாலேயே திருக்குறளில்  சொல்லப்பட்டுவிட்டது.  


ஆன்மிகத்தின் மிக வளர்ச்சி பெற்ற உயர்ந்த நெறியாக இன்று பலர் போற்றும் அரவிந்த அன்னை நெறி, சமயம் கடந்த ஆன்மிகம் என்பதே. அரவிந்தரும் அன்னையும் சமயத்திற்கு விரோதமானவர்கள் அல்லர். ஆனால், சமயம் கடவுளை அடையும் ஒரு வழிதானே தவிர அந்த வழியே கடவுளாகாது என்பது அவர்கள் கருத்து. அவரவர் தத்தமது சமயம் என்ற வழிமூலம் பயணம் செய்து சமயம் கடந்த ஆன்மிகத்திற்கு வந்துசேர வேண்டும், அப்படி வந்துசேர்ந்து கடவுள் சக்தியை நம்மில் இறக்கிக் கொள்ளவேண்டும். 


மின்சக்தியைப் போல உலகெங்கும் பரவியிருக்கும் தெய்வ சக்தியைத் தூய தவ வாழ்வு மூலம் மனித உடலில் இறக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தங்கள் வாழ்வால் நிரூபித்தவர்கள் அன்னையும் அரவிந்தரும். 


 

ஆன்மிகம் பல்லாண்டுகளாகத் தழைத்து வளர்ந்தபிறகு அவர்கள் கண்டறிந்து சொன்ன  `மதங்கடந்த ஆன்மிகம்’ என்ற உயரிய கோட்பாட்டிற்கான விதையைத் தமிழில் மிகப் பழங்காலத்திலேயே வள்ளுவர் விதைத்துவிட்டார் என்பது தமிழர்கள் எண்ணிப் பார்த்துப் பெருமை கொள்ளத்தக்க செய்தி. வள்ளுவர் வகுத்த மதங்கடந்த ஆன்மிகக் கோட்பாடு தழைக்குமானால் ஜாதி மதச் சண்டைகள் நிகழ வாய்ப்பே இல்லை. 

 

Source

navigate_next
அறம் பொருள் இன்பம் வீடு

ஆரணங்காண் என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங்காண் என்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்:
ஏரணங்காண் என்பர் எண்ணர்: எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங்காய சிற்றம்பலக்கோவையைச் செப்பிடினே.
-ஆன்றோர் வாக்கு

அறம் பொருள் இன்பம் வீடு:

மனிதன் அடையவேண்டிய பயன்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவற்றை வடநூலார் தர்மம், அர்த்தம் (பொருள்), காமம், மோட்சம் என்பர். இக்கருத்தையே நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் "அறம் பொருள் இன்பம், வீடு அடைதல் நூற்பயனே" (நன்னூல் பொது. 10) என்னும் நூற்பாவால் தெரிவித்துள்ளார்.

இவற்றுள் அறமும், பொருளும், புறப்பொருளாகும். இன்பமும் வீடும் அகப்பொருளாகும். இவற்றுள் முதலும் கடையும் இன்றி அஃதாவது முதலில் உள்ள அறத்தையும், கடைசியில் உள்ள வீட்டையும் விட்டு இடையில் உள்ள பொருளையும், இன்பத்தையுமே எல்லோரும் அடைய விரும்புகின்றனர்.

இன்பம் துய்க்க வேண்டுமெனில் அதற்குப் பொருள் வேண்டும். பொருள் ஈட்டவேண்டுமெனில் அதற்கு முதல் வேண்டும். அம்முதலை வைத்துத் தொழில் செய்யவேண்டுமெனில் அதற்கு ஒரு கடை வேண்டும். முதல் தான் முதலில் உள்ள அறமாகும். கடைதான் கடைசியில் உள்ள வீடாகும். முதலும் கடையும் இன்றி பொருள் ஈட்டவும் இன்பம் நுகரவும் முடியாதன்றோ?

எனவே வாழ்விற்கு முதலாகிய - அடித்தளமாயுள்ள அறத்தின் வழியே பொருளை ஈட்டி அப்பொருளின் வழியே இன்பம் துய்த்து, இவ்வுலகச் சிற்றின்பம் கைக்கும்போது உயிர்கள் வீடுபேறு அடைகின்றன. வீடுபேறே முடிந்த பயனாகும்.

பரனை நினைந்து பணி செய்க:

அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

-ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64

நல்லோருக்கும் நற்செயலுக்கும் கொடுத்தலே அறமாகும். தீவினைவிட்டு நல்வழியில் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பமாகும். பரனை நினைந்து அவனருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடாகும்.

வீடு என்றால் விடுபடுதல். விடுதலையை மட்டும் ஔவையார் சொல்லவில்லை. இவ்வுலகைவிட்டால் உயிர் பெறுவது பேரின்ப வீடாகும் என்கிறார். இதனால்தான் வீட்டை, வீடுபேறு எனக் குறித்தனர் அறவோர். வீடு - துன்ப நீக்கம். பேறு - இன்ப ஆக்கம் என்கிறது சித்தாந்த சைவம்.

இப்பாடலில் பரனை நினைந்து என்பதே முக்கியமானது. அவனன்றி அவனியில் ஒன்றும் அசையாதல்லவா? எனவே பரனை நினைந்து ஈதலே அறம் எனப்படும். பரனை நினைந்தாலே தீவினைவிட்டு நல்வினைப்பட்டுப் பொருளீட்டும் செயல் நிகழும். பரனை நினைந்தாலே இன்பமும் எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுடன் நிகழும். பரனை நினைந்தாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும்.

எனவே இப்பாட்டில் "பரனை நினைந்து" என்பதை இடை நிலைத் தீவகமாகக் கொண்டு பொருள் காணவேண்டும்.

அடுத்தவன் பொருளை அறம் செய்யலாமோ:

பரனை நினைந்து என்று ஏன் சொன்னார் என்றால், எல்லாப் பொருள்களுமே பரமனது உடைமைகள். அவற்றை நாம் நமது உழைப்பிற்கேற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும்.

இதனைப் பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுவது காண்க.

"பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்,

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை, இடைநடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது"

-பட்டினத்தடிகள், திருஏகம்பமாலை, பா.7

என்பதே அப்பாடல் பகுதி.

சொத்து இறைவனது எனில், அவனது அநுமதி இன்றி அதன்மேல் நமக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவேதான் அறம் செய்தல், பொருள் ஈட்டல், இன்ப நுகர்வு, வீடுபேறு எல்லாமே அவனருளால் நாம் பெற்று நுகர்கிறோம். அப்பொருள்கட்கு நாம் காவலராகவும். தர்மகர்த்தராகவும் இருக்கிறோமேயன்றி பொருள் அனைத்தும் நமதாகாது. இத்தர்மகர்த்தா தத்துவத்தை நமக்கு முதலில் உபதேசித்த நூல் "ஈசாவாசியம்" என்னும் உபநிடதமாகும்.

இவ்வுபநிடதமே காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது. அவர் அதனைத் தனது வாழ்வில் மேற்கொண்டார். அதனால்தான் அவர் மகாத்மா காந்தி ஆனார். எனவே பரனை நினைந்து ஈதல், பரனை நினைந்து பொருளீட்டல், பரனை நினைந்து இன்பம் நுகர்தல், பரனை நினைந்து இம்மூன்றையும் விடுதல் எவ்வளவு பொருத்தமா யிருக்கிறது என்பதை உணர்ந்து கடைப்பிடித்து உயர்வோமாக.

உலகியல் சிற்றின்பம் நுகர உடல்வளர்ச்சியும் பக்குவமும் வேண்டும். உலகியற்கு அப்பாற்பட்ட பேரின்பம் நுகர வேண்டு மானால் உயிர் வளர்ச்சியடைந்து பக்குவப்படவேண்டும். உலகியல் இன்பம் சிறிது பொழுது இன்பம் பயத்தலின் இது சிற்றின்பம் எனப்பெறும். உடல் முதலிய கருவி கரணங்களைக் கொண்டு அநுபவிக்கப்பெறுவது. இறையியல் பேரின்பம் நுகர உயிர் பற்றற்றுப் பக்குவப்பட்டாலே இறையருளில் திளைக்கும் பேரின்ப அநுபவம் கிட்டும். இப்பேரின்ப நிலையை உலகியல் சிற்றின்ப வாயிலாக அருளியல் பேரின்ப அநுபவங்களை எல்லோரும் பெறுமாறு திருக்கோவையார் என்னும் அருள்நூலால் தெளிய விளக்கி அருள்கிறார் மணிவாசகர்.

அகஒழுக்கமும் புறஒழுக்கமும்:

பழம்பெரும் நாகரிகப் பண்பாடு வாய்ந்த நாடு நம் பாரத நாடு. அதனிலும் தென்தமிழ்நாடு பல்லாற்றானும் பண்பாடுடையது. வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என இருதிறப்படுத்தி, அகவாழ்வை அக ஒழுக்கம் என்றும், புறவாழ்வைப் புற ஒழுக்கம் என்றும் நெறிப்படுத்தினர். அக ஒழுக்கத்தை அகத்திணை என்றும், புறஒழுக்கத்தைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.

திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல்.

முத்தமிழ்:

வாழ்வை, அகம், புறம் என்று அறிவித்த நமது முன்னோர், நாம் பயிலும் மொழியை இயல், இசை, நாடகம், என முத்தமிழாக மொழிந்தனர். இங்கு இயல் என்பது அறிவியல். இசை என்பது அறிவியலை இசையால் - சொல்லால் மக்கட்குப் புலப்படுத்தும் சிறந்த கருவிகள் இரண்டனுள் ஒன்று. நாடகம் என்பது அறிவை மெய்ப்பாடு என்னும் நடிப்பால் புலப்படுத்தும் மற்றொரு கருவி. ஒரு பறவை என்பது இயலாகிய அறிவு என்றால், அப்பறவை பல இடங்கட்கும் செல்வதற்குத் துணை செய்யும் இரு சிறகுகள் போல்வன இசையும் நாடகமும் என்பது சிந்திப்பார்க்குப் புலனாகும்.

தகுதியுடையோர்க்கே உபதேசம்:

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அறவுரையைத் தகுதி வாய்ந்தவர்கட்கே உபதேசிக்கவேண்டும் என்பார் ஞானசம்பந்தர். திருமுதுகுன்றத் தேவாரத்தில் இதனைக் காணலாம்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழிச்

சழிந்த சென்னிச் சைவவேடந் தான் நினைந்து ஐம்புலனும்,

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

(தி.1 ப.53 பா6)

புறம் என்பது எல்லோருக்கும் விளங்குமாறு எடுத்துச் சொல்ல இயல்வது. அகம் என்பது ஒருவன்தானே அந்நிலை எய்தி அநுபவித்து அறிவதேயன்றிப் பிறர்க்கு இவ்வாறு இருந்தது என்று எடுத்துச் சொல்ல இயலாதது. இன்பமும் வீடும் அத்தகையனவே.

இதனைத் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்

"இங்ஙண் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன்

அங்ஙன் இருந்ததுஎன்று உந்தீ பற; அறியும் அறிவதன்று [உந்தீ பற:"

-திருவுந். பா. 4

என்று தாம் அருளிய திருஉந்தியார் என்னும் நூலில் தெரிவித் துள்ளார். திருமூலரோ,

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய

சுகத்தைச்சொல் என்றால் சொல்லுமாறு எங்ஙனே?

(தி.10 பா. 2944)

என்று தெரிவிக்கிறார்.

வழக்க, பழக்க, ஒழுக்கம்:

"வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்டாகலான"

-தொல். மரபியல் 93

என்பது தொல்காப்பியம். உலகியல் நடைமுறையை வழக்கு என்கிறோம். பண்பாடு இல்லாதாருடைய நடைமுறையை வழக்கென்றல் கூடாது. பண்பால் உயர்ந்தோருடைய நெறிமுறைகளே வழக்கெனக் கொள்ளப்படும். அவ்வழக்கத்தையே ஒழுக்கம் எனப்போற்றி மேற்கொள்கிறோம். பெரியோர் வழக்கமே மக்களிடையே பழக்கமாகிப் பின்னர் அதுவே ஒழுக்கம் என மக்களால் போற்றப்படுகிறது. எனவே அகம், புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

-குறள் 131

என அறிவிக்கிறார். ஒழுக்கம் என்று வாழ்வில் எல்லாத் துறைகளிலும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக் கொள்ளப்படுகிறது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்துறை ஒழுக்கத்தைக் குறியாது அகத்துறை வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகியலில் குறிப்பதைக் காணலாம்.

ஒழுக்கமும் அன்பும்:

மேலும் ஆண்களின் அகவாழ்வு நெறிமுறையை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறிமுறையைக் கற்பு என்றும் தமிழ்ப் பண்பாடு நமக்கு அறிவிக்கிறது. கற்பு என்பது கற்றலையும் கற்பித்த வழி நிற்றலையுமே குறிக்கிறது. பெண்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் கற்பித்த வழி நிற்றலே கற்பெனப் போற்றி வந்துள்ளனர். "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை" என்னும் கொன்றைவேந்தன் 14ஆம் வரியும் நினைவு கூரத் தக்கது.

கற்பு என்ற சொல், பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும் வருவது காணலாம். ஞானசம்பந்தரை வெப்புநோய் வாதத்திற்கு அழைத்தபோது அவர் மதுரைத் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதர் சந்நிதியில் "காட்டுமா வதுரித்து" என்று தொடங்கும் பதிகம் (தி.3 ப.47 பா.1) பாடினார். அப்பதிகத்தில் "மண்ணகத்திலும்" என்று தொடங்கும் மூன்றாம் பாடலின் இறுதி வரியில் "தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே" என்றருளினார். இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நீர்மை இலாச்செயலை அழிக்கத் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதே பொருளாகக் கொள்ள வேண்டும். இங்கு கற்பு என்பதற்கு மகளிரின் ஒழுக்க நெறிகள் என்று கொள்ளல் பொருந்தாது.

இதே போன்று திருப்பழுவூர்த் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் "மேவயரும் மதிலும்" என்று தொடங்கும் பாடலில் மூன்று, நான்காம் வரிகள் சிந்திக்கற்பாலன.

"பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ்சொல்லிப்

பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே"

(தி.3 ப.34 பா.6)

என்பது அப்பாடற்பகுதி. இதன் கருத்து பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு மகளிர் இறைவன் புகழைக் கற்பித்து வருகிறார்கள் என்பதாகும். இங்கு கற்பு என்பது கற்பித்தலையே குறிக்கிறது. இது பற்றித் தருமை ஆதீனக் குரு முதல்வர் குருஞானசம்பந்தர் மகளிர் ஒழுக்கத்தையும், கற்றலையும் குறிக்குமாறு சிவபோகசாரம் என்னும் நூலில் அருளியுள்ளதும் இங்கு சிந்தித்தற்குரியது. அப்பாடல் வருமாறு :

நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே

பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி

கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த

விழல்எனவே நீத்துவிடு.

-சிவபோக. பா. 130

இப்பாடலில் கற்பிலரும் என்பது கல்லாதவரையும், கற்பொழுக்கம் இல்லாதவரையும் குறித்தல் காணலாம்.

இன்னோரன்ன கருத்துக்களையெல்லாம் ஒருங்கு திரட்டித் தமது திருக்கோவையார் என்னும் அருள்நூலில் மாணிக்கவாசகர் அருளியுள்ளதை இனிக் கண்டு மகிழலாம்.

 

Source

navigate_next
முக்குணங்கள்

முக்குணங்கள்


முக்குணங்கள் Guṇa (சமக்கிருதம்: गुण) என்பது சாங்கிய தத்துவத்தின்படி சாத்விக குணம், இராட்சத குணம், மற்றும் தாமச குணம் ஆகியவைகளைக் குறிப்பதாகும். சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராட்சதம் சிவப்பு நிறத்தையும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது பொதுவான கருத்து. சாங்கியர்கள் முக்குணங்களின் சேர்க்கையினாலேயே உலகமானது உருவாகியது என்பர். முக்குணங்கள் சமநிலையில் இல்லாத போது பிரளயம் தோன்றுகிறது.



பொருளடக்கம்
1 சத்வ (சாத்விகம்) குணம்
1.1 சத்வ குண பலன்கள்
2 ரஜோ (இராட்சதம்) குணம்
2.1 ரஜோ குண பலன்கள்
3 தமோ (தாமசம்) குணம்
3.1 தமோ குண பலன்கள்

 

சத்வ (சாத்விகம்) குணம்


சத்வகுணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.



சத்வ குண பலன்கள்


சத்வ குணத்திலிருந்து தர்மச்செயல்கள்; தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.



ரஜோ (இராட்சதம்) குணம்


ரஜோ குண இயல்புகள்- ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.



ரஜோ குண பலன்கள்


ரஜோ குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.



தமோ (தாமசம்) குணம்


தமோ குண இயல்புகள்- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.



தமோ குண பலன்கள்


தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

 

Source

navigate_next
முக்குணங்கள் II

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற பரிபூரணப் பேரானந்தமாகிய பரப்பிரம்மம், இயற்கையோடு சேர்ந்து பஞ்சபூத சேர்க்கையுடைய இந்த உடலை அடைகின்றது. இயற்கையான ஷேத்திரம் அழியக்கூடியது. அது நானல்ல. அதனுள்ளே இருக்கின்ற ‘புருஷன்’ என்று கீதையில் சொல்லப்படுகின்ற ஷேத்திரக்ஞனே நான்.

அது வேறு, இது வேறு என இரண்டையும் தனித்தனியாக அறிய வேண்டியது, ஆத்ம சாதகனுக்கு மிக அவசியம். இதுதான் ஞானம்.

இந்த உண்மையை இப்படி நன்றாகப் புரிந்துகொண்ட ஞானியருக்கு மறு பிறப்பில்லை. மீண்டும் உடலெடுத்து அதற்குரிய கர்மப்பலன்களை அனுபவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. இப்போது, இதிலிருந்து நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், ஆத்மா வேறு, இந்த உடலோடுகூடிய வாழ்க்கை வேறு. இப்பிறப்பில் நிகழ்பவையெல்லாம் கர்மத் தொடர்பால் வந்தவை. இவற்றை நான் எனதாக ஏற்று அறியாமையுடன் செயல்படாமல், நான் ஆத்மா என்ற உணர்வில் நின்று செயல்பட்டால், பிறகு மறு பிறப்பு இருக்காது. மேலும் கர்மாவை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்வதால், இருக்கின்ற கர்மாவும், நாம் பெற்றுள்ள ஞானத்தால் அழிந்துவிடும். இதைத்தான் நாம் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இது கீதையால் நாம் அறிய வேண்டிய மிகமிக அரிதான ஓர் உண்மை.

மிகச் சுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் வெறும் கருவி. நடப்பவையெல்லாம் அவன் விருப்பப்படி நடக்கின்றன! என்று திரும்பத்திரும்ப நாம் நினைத்துக்கொண்டே இருந்தால் சரி. பெரியவர்கள் அடிக்கடி சொல்கின்ற வார்த்தை என்ன? நம் கையில் என்ன இருக்கிறது? நடப்பதெல்லாம் நாராயணன் செயல்! என்று தானே. கீதையின் உட்பொருளே இந்த எளிய வாக்கியத்திற்குள் அடங்கியிருக்கிறது பாருங்கள்.

உடலாகிய இயற்கையுடன் புருஷனாகிய ஆத்மா கலக்காமல் தனித்து இருக்கப் பழகுவதற்குக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு அந்த இயற்கையையே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றார். “ஆகாயம் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருந்தாலும் அது மிக சூட்சுமமாகவும் இருக்கிறது அல்லவா! அது எந்தப் பொருளிலும், பிராணியிடத்திலும் ஒட்டுவதில்லை. அதைப்போலவே மூல புருஷன் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் எந்த உடலிலும் சிறிதும் ஒட்டிக்கொண்டிருப்பதில்லை.”

“உடலினுள் உறைந்தாலும் ஆத்மாவாகிய புருஷன் ஏன் செயல்படாமல், ஒட்டாமல் வெறும் சாட்சியாக மட்டும் இருந்து கொள்கிறான் கிருஷ்ணா?” என்று அர்ச்சுனன் கிருஷ்ணனை இடைமறித்துக் கேட்கிறான்.

அதற்குக் கிருஷ்ணர், அந்தச் சூரியனைக்கொண்டு மீண்டும் விளக்குகின்றார். “அர்ச்சுனா! சூரியன் எல்லா உலகங்களுக்கும் ஒளியை வழங்குகின்றான். ஆனால் அவனது ஒளியினால் பொருள்கள் விளங்குகின்றனவே தவிர, அந்த ஞானஒளியைத் தாம் பெற்றுத் தாமே சுயமாக ஒளிவீசச் செய்யும் தன்மையை அப்பொருள்களுக்குச் சூரியன் தந்துவிடுவதில்லை”.krisha_says

அதாவது சூரியன் இருக்கும் வரை பொருள்கள் தெரியும். சூரியனின் ஒளி மறைந்துவிட்டால் பொருள்கள் தெரியாது. சூரியன் ஒளி மட்டுமே. அப்படி ஒளிர்கின்ற சூரியன் ஒளியைப் படைப்பவனோ, உருவாகும்படி செய்பவனோ அல்லன். அதாவது அந்த சூரியனுக்கும் ஒளியாக இருந்து பிரகாசிப்பதும் பிரம்மமே.

ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்திரமாகிய படைப்பிற்கும், ஷேத்ரக்ஞனாகிய ஆத்மனுக்கும் உள்ள வேற்றுமையைப் பிரித்து உணர்கின்ற ஞானிகள் இயற்கையின் பிடியிலிருந்து விடுபட்டுப் பரம் பொருளை அடைகின்றனர். அவர்கள் தமது வாழ்க்கையில் எது நடந்தாலும் அவற்றோடு சம்பந்தப்படாமல் வெறும் சாட்சியாக மட்டும் இருந்து வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றனர். தம்மை அவர்கள் பரமாத்மாவுடன் இணைத்துக்கொண்டு, உடல் சம்பந்தத்திலிருந்து விலகி நின்று வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்கள் நிலைத்திருப்தால் அவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே பாதிப்பைத் தருவதில்லை. எனவே ஞானப்பயிற்சி மூலம் பரிணாம முன்னேற்றம் அடைய விரும்புகின்ற யாரும் இனி இந்தப் பொய்யான வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் உண்மையென்று நினைத்து மனமுடைந்து போகாமல், வருத்தப்படாமல், நடப்பவையெல்லாம் நன்மைக்கே எனத் திடமாய் உணர்ந்துகொண்டு, நான் பிரம்மம்! இவையெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்! வருவதை ஏற்போம்! என்று திடமாய் இருந்து, பொறுமையாய் ஏற்று வெறும் சாட்சியாய் இருக்க முயற்சித்தல் நன்று.

14.குணத்ரய விபாக யோகம்:
சில சமயம் சிலர் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து, இவன் என்ன இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறான்? குணம் கெட்டு நடக்கின்றானே? என்று பலரும் நொந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போது இவன் குணம் சரியில்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம்! என்று அவர்களை ஒதுக்கிவிட்டுத் தாம் விலகிப் போகின்ற சம்பவமும் எத்தனையோ பேருக்கு நடந்திருக்கும். இந்தக் குணம் என்பது என்ன? அது ஏன் அடிக்கடி மாறுகின்றது? அப்படி மாறி மாறி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? போன்ற விபரங்களை நாம் அறிந்து கொள்வதற்கு இந்தக் குணத்ரய விபாக யோகம் என்னும் 14வது அத்தியாயம் கண்ணனால் கீதையாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு நாம் பிறரைப் பற்றியும், நம் குண மாறுபாடுகள் பற்றியும் சிந்தித்துப் பார்த்துச் சரியாக நடந்துகொள்ள முடியும்.

த்ரய என்றால் மூன்று என்று பொருள். விபாகம் என்றால் பிரிவுகள் என்று பொருள். மனிதப் படைப்பில் அமைந்துள்ள மூன்று விதமான குணங்களை ஆராய்ந்து பார்க்கின்ற அத்தியாயம் இது. இந்த மூன்று குணங்களின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு விட்டால், ஒருவன் இந்தப் பிறவிப் பெருங்கடலை மகிழ்ச்சியாகத் தாண்டிவிட முடியும். மனித மனதின் தன்மை, அதன் போக்கு, செயல்பாடு போன்றவற்றை முழுவதுமாக அலசிப் பார்க்கின்றது இவ்வத்தியாயம்.

எத்தகைய மனிதர் என்றாலும் அவர் முக்குணங்களின் அடுக்குகளாய் அமைந்தவராகவே இருப்பார். அந்த முக்குணங்கள், சாத்வீகம், ரஜோ குணம், தமோ குணம் என்பவை ஆகும். ஒவ்வொருவரின் இயல்பில் ஒவ்வொரு குணத்தின் தன்மை மேலோங்கி நிற்கும். தமக்குரிய அடிப்படைக் குண இயல்பை ஒட்டிய நிலையில் அமைகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இந்தக் குணங்கள் மாறி மாறி அமையும். இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரவர் கா;மப் பதிவுகளுக்கு ஏற்ப அமைந்து இக்குணங்ளைத் துhண்டிச் செயல்பட வைக்கும்.

சத்வ குணம் மனிதனுக்கு ஞானஒளியையும், நன் மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜோ குணம் அவா, பற்று முதலிய குணங்களை அளித்துக் கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. தமஸ் எனும் தாமச குணம் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது. இம்மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று அதிகமாக இருக்கும். அவற்றிற்கேற்ப மனிதன் செயல்படுவான். பிறக்கும் பொழுதே கர்மப்பதிவுகளின் அடிப்படையில் ஒருவனுக்கு இந்த மூன்று குண இயல்புகள் அமைந்திருக்கும்.

சோம்பேறித்தனத்தை அளிக்கும் தமோ குணத்தை அகற்றி, அதன்பின் படபடக்கும் ரஜோ குணத்தை இல்லாமற் செய்து, பிறகு அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துகின்ற சத்வ குணத்தை வளர்க்க வேண்டும்.

ஒன்றுமே செய்யாமல் சோம்பலாய்ப்படுத்துக் கிடப்பதை விட, ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடத் தொடங்கினால், அந்தப் பழக்கமே இழுத்துக்கொண்டு போய்ப் பிறருக்கு ஏதாவது செய்வோமே என்று உதவியாகச் செயல்பட வைக்கும். தமோ குணத்தை ரஜோ குணமாக்கி, ரஜோ குணத்தை சாத்வீகமாக அமைதிப்படுத்தி உயரும் முயற்சி இது.

Source

navigate_next
முக்குணங்கள் உணவு

ஒருவருடைய மனதில் மாயையின் மூன்று அம்சங்கள் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) பல்வேறு நிலைகளில் வியாபித்திருக்கும். சத்வ குணம் அடக்கம், மன அமைதி, கட்டுப்பாடு மற்றும் தூய்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. ரஜோ குணம் மாயையிலுள்ள இன்பங்களான தனி மனித விருப்பங்கள் மற்றும் சுகங்களைக் குறிக்கும். தமோ குணம் பெரும்பாலும் கேடான நிலைகளான கோபம், எதிர்புணர்வு, மிருகத்தனம் மற்றும் அழிவு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. ஒருவர் இறைவனைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென்றால், ரஜோ மற்றும் தமோ குணங்களை அடக்குவதும் சத்வ குணத்தை நிலை நிறுத்துவதும் அவசியமாகிறது. 

பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் ஒருவருடைய மனதின் நிலையை பாதித்து அவர்களின் சத்வ, ரஜோ மற்றும் தமோ குணாதிசயங்களை மாற்றியமைக்கக் கூடியவை. எடுத்துக்காட்டாக, மது விழிப்புணர்வைக் குறைத்து, ஆசை போன்ற ரஜோ குணங்களை ஊக்குவிக்கிறது. இதேப்போல் வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவை கோபம் போன்ற தமோ குணங்களை அதிகரிக்கக்கூடியவை. இறைவனை துதிப்பவர்கள் ரஜோ அல்லது தமோ குணங்களைக் கொடுக்கவல்ல எந்த உணவையோ அல்லது பானத்தையோ உண்ணாமல் இருப்பது அவசியமாகிறது. ஏனெனில், இறை வழிபாட்டிற்கு இவை தடையை ஏற்படுத்தும். 

மேலோங்கி இருக்கும் போது ஒருவருடைய மனமானது அமைதியின்றி காணப்படும். எனவே, இந்த சூழ்நிலைகளில் ஒருவர் இறைவனை துதிக்க இயலாது. சத்வ குணம் நிறைந்திருக்கும் போது, தியானம் மற்றும் நம்பிக்கை மிகுந்த இறைவழிபாடு சாத்தியமாகிறது. எனவே இறைவனின் சீடர்கள், அனைத்து நேரங்களிலும் ரஜோ மற்றும் தமோ குணங்களை தொடர்ந்து அடக்கி, சத்வ நிலையை எய்த முயல வேண்டியது அவசியம்.

 

ஒருவர் சுவை போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி தூய்மையுடன் இருந்து மனதையும் தூய்மையாக வைக்க வேண்டியது அவசியம். மனம், செயல் மற்றும் பேச்சில் தூய்மையை கடைப்பிடிப்பதன் மூலமே இறைவனை மகிழ்ச்சியுறச் செய்ய முடியும். 

 

Source

 

 முக்குணங்க்களுக்கு ஏற்ற உணவு
Full Book

navigate_next
முக்கியப்பிராணன்

 

 

 

 

 

 

 

 

இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் யோக உறுப்புக்கள். முதலிரண்டும் மேல் மனம், ஆசனம் –இருக்கை, உடல்- ப்ராணாயாமம், உடலில் மூச்சு- ப்ரத்தியாஹாரம், பொறிபுலன்- தாரணை, ஆழ்மனத்தை நாட்டல்- தியானம், மனம் ஒருநிலைப்படுத்துதல்- சமாதி எனக் கருதவேண்டும்.

 

Source

 

 

முக்கியப்பிராணன்


முக்கியப்பிராணன்
உட்பிராணன்

                                                                       
பிராணன் - இதயத்தின் அனைத்து பகுதிகளிலும் 

அபானன் - வயிறு, புஜங்கள் , பெரீனியம் 

வியானன்- உடல் முழுவதும் 

உதானன் - இதயம், தொண்டை, பிளேட் ஏரியா , தலை , கண்புருவம் 

சமானன்- நேவல் (வயிறு) 

கூர்மன் - கண் இமைகள் 

தனஞ்செயன் - எலும்புகள் ,சதை , தோல், ரத்தம் , நரம்புகள் , உரோமம் கிருகரன் -வயிற்றின் சிறிது மேல்புறம் 

நாகன் - வயிற்றின் சிறிது மேல்புறம் 

தேவதத்தன் - தொண்டை, மூச்சுக்குழாய் மேல்புறம்


மூலாதாரம் -பூமி 

சுவாதிஷ்டானம் -நீர் 

மணிபூரகம் -நெருப்பு 

அனாகதம் -காற்று 

விசுத்தி- ஆகாயம்


மூலாதாரம் - குறி, குதம், தொப்புள் கீழ்ப்பகுதி முழுவதும் 

சுவாதிஷ்டானம் - தொப்புள், வயிற்றின் கீழ்ப்புறம், சிறுகுடல் ,பெருகுடல்

மணிபூரகம் -மேல் வயிறு முழுதும் , பித்தம் , கணையம் , இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள் 

அனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை,

விசுத்தி - மூச்சுக்குழல் , தொண்டை முழுவதும், 

ஆக்ஞை - கண் , மூக்கு இரண்டின் நடுப்புறம் , கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி . நெற்றி (நடு, மேல்)


பிராணாயாமம் (யோகம்) என்பது பாரதத்தின் கிடைத்ததற்கரிய சொத்து. 
இங்கிருந்தே இக்கலை உலகம் முழுவதும் பரவியுள்ளது. 


இதைக் கண்டறிந்து காலம் காலமாக இந்த பயிற்சியில் ஆழ்ந்து தான் வேறு உலகம் வேறு என்றல்ல இரண்டுமே ஒன்றே . நாமே இறைவன் என்பதை கடுந்தவம் மூலம் உலகிற்கு உணர்த்தியது மட்டுமல்லாமல் , வாழ்ந்து காட்டியும் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற எல்லையற்ற பெருங்கருணையால் மனித குலத்தை மேம்படுத்தவும் மனிதத்தின் மூலம் அனைத்து உயிரிகளையும் நேசித்து அவைகளையும் உயர்த்த வழி கூறிய மஹா சித்த புருஷர்கள் வாழ்ந்த ஞான பூமி இது. 


இந்த யோகக்கலை (யோக விஞ்ஞானம்)யை விண்ணவரும் மண்ணவரும் கற்றுத் தேர்ந்து இறைவனோடு இணையும் வித்தையை நமக்கு அளித்த
 மஹா புருஷர் ஞான சிம்மம்மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவர்.
அவர் ஒரு அவதார புருஷராகவும் , வேத புருஷராகவும்,சித்த புருஷராகவும் விளங்குபவர்.

பார் முழுதும் இன்று பரவி வளர்ந்து நிற்கும் இந்த யோகக்கலையை அடிப்படையாக வைத்தே பற்பல அருளாளர்களும், மஹான்களும் அவரவர்களுக்கு உரிய விளக்கங்களுடன் யோகத்தைப்பரப்பி வருகிறார்கள். இதில் பலர் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியினை முன் நிறுத்தாமல், தாமே அதைக் கண்டுபிடித்தது போலவும் தத்தம் விளக்கங்களே சிறந்தது என்றும் குழப்பியும் வருகிறார்கள். யோகம் என்றால் (யோகா) என்பது ஆசனங்கள் எனக் கூறுபவரும் உண்டு. அதனை வியாபாரத்திற்க்குரிய தொழிலாகவும் மாற்றி வருபவரின் பெயர்பலகைகள் எண்ணிலடங்காதது.


யோகாசனம் என்பது யோகமும்+ஆசனமும் இரண்டறக் கலந்தது என்பதே சத்குரு பதஞ்சலி மஹரிஷியின் உண்மை விளக்கமாகும். 

இறைவனை முன்னிறுத்தியே இக்கலை மிளிர்கின்றது. 

இதைத்தவிர்த்துக் கூறுவது அனைத்தும் இக்கலைக்குப் புறம்பானவையே. 


யோகம் என்றால் இணைவது, சேர்வது என்பதே. நான் என்ற தூல உணர்வுக்கு அடிப்படையான புலன்களின் அறிவால், நான் யார் என்பதை அறிவது இயலாது. நான் என்ற தூலத்தின் அடிப்படை கொண்டும் அதன் துணை கொண்டும் , தூலத்துள்ளேயே ஒடுங்கி,தூலத்தின் மூலம் பிரகாசிக்கும், ஆன்மாவை (ஒரு இறைக்கூற்றை ) இறைவனோடு இணைப்பதே யோகமாகும். 

இவ்விணைப்பிற்கு உதவிடும் வகையில் , இவ்வுடலின் உள்ளே மறைந்து கிடக்கும் உடல் ஆற்றலைப்பெருக்கி (சூட்சம , காரண) சரீரங்களைக் கண்டுகொள்ளவும் , யோக முன்னேற்றங்களை அடைந்திடவும் " பிராணாயாமம்" ஒரு பாலமாகவும் அதுவே ஒரு யோகமாகவும் விளங்குகிறது.



இதன் மூலம் பஞ்ச/தச/பிராணன்களின் கூட்டிற்கு (கலப்பிற்கு) பிரதான பிராணன் என்ற- பிராண வாயுவினை வசப்படுத்துவதன் மூலம் அல்லது அதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் , அதன் பல்வேறு மறைதல் , பிறிதொரு வாயுவின் கலப்பு ஆகிய நிகழ்வுகளின் வழியே குண்டலினியின் பேராற்றலை அடைதற்கும் பிராணாயாமம் என்ற தொழிற்படுதலே பிரதானமாகின்றது.

மஹரிஷி பதஞ்சலி தமது யோக சூத்திரத்தின் திறவுகோலாகவும் , யோகப்பயணத்தில் எட்டு விதமான பாதைகளைக் காட்டி இந்த எட்டினையும் ஒருங்கிணைக்கும் வழி வகை வித்தைகளை 
தமது 195 சூத்திரங்களில் விளக்கியுள்ளார். 

இவை யாவும் வடமொழி மூலமாக உள்ளதாலும் அணுவினுள் கடல்களைப் புகுத்தியுள்ளது போல் தமது சூத்திர ( ஒரு, இரு, மூன்று) வரியினுள் அத்தனையும் அடங்கியிருப்பதால் , இதற்கு மொழி 
-மற்றும் ஆன்மீக , யோக அடிப்படை உணர்ந்த பெரியோர்கள் அழகிய விளக்கங்களை நமக்குத் தந்துள்ளனர். 

அவர்களுள் கடலங்குடிப் பெரியவர் பிரம்மஸ்ரீ நடேச சாஸ்திரிகள் சுவாமி வீரத்துறவி விவேகானந்தர் , சுவாமி என்ற என். ஆர். சம்பத் அவர்கள் , சுவாமி ஸ்ரீ சிவானந்தா, சுவாமி ஸ்ரீ சச்சிதானந்தா, மகான் ஓஷோ மற்றும் எத்தனையோ அருட் செல்வர்கள் ஸ்ரீ பதஞ்சலி யோகசூத்திரங்களுக்கு உரைசெய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த அடியேனது பணிவான வணக்கங்களை
-என்றென்றும் வைக்கிறேன். 



                                                யோக சூத்திரங்கள் 

சமாதி பாதம் 51 சூத்திரங்கள் 


சாதனா பாதம் 55 சூத்திரங்கள் 


விபூதி பாதம் 55 சூத்திரங்கள் 


கைவல்ய பாதம் 34 சூத்திரங்கள் 


மொத்தம் 195 சூத்திரங்கள் 


யோகம் பிராணயாமம் 

ஆன்மீக முன்னேற்றங்களை அடைய முக்கியத்துவம் அளிப்பது மட்டுமில்லாமல் உடலைப்(physical body and mental health) பேணுவதற்கும் , மனதை மனநோய் மற்றும் அமைதியின்மை , மன அழுத்தம் ) இவற்றினின்று காத்து மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் அத்தியாவசியமான கலை யோகம், பிராணாயாமம் ஆகும்.

மேலும் குறிப்பாக நவீன மருந்துகளால் கூட தீர்க்க முடியாத ஆஸ்த்துமா , இதய நோய், நீரிழிவு நோய் , புற்று நோய்,ஆகிய ஆட்கொல்லி நோய்களை (முறையாகசெய்யும் பிராணாயாமம், யோகம் ) மூலம் நிச்சயமாகத் தீர்க்க முடியும் என நிரூபணமாகியுள்ளது. 

பிராணக்காற்று (பிராண வாயு)பஞ்ச பூதங்களில்
 ( நிலம், நீர்,காற்று (வாயு) , நெருப்பு ,ஆகாயம் )மிக முக்கிய பங்காற்றுகிறது மட்டுமின்றி பிராண வாயு பயிற்சியினால் ஏனைய
(பஞ்சபூதக் குறைபாடுகளை)க் கட்டுப்படுத்தவும் முழுதும் சரி செய்யவும் இயலுமென்பது சித்தர்கள் வாக்கு.

முந்தைய , தற்போதைய இந்திய தத்துவ ஞானிகள் கண்டுபிடித்த , ஒத்துக் கொண்ட பயிற்சியின் மூலம் பலன் அடைந்த படி, கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளனர். 


ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி அவர்களின் சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திரத்தில் மனித உடல் பஞ்ச பூத பொருட்கலப்பினால் அதனதன் விகிதங்கள் சரியாக இருக்கும் வரை நோய்கள் மற்றும் வயோதிகம் (மூப்பு) அவனைத் தீண்டுவதில்லை என உறுதி படக்கூறியுள்ளார் . 

அச்சரிவிகிதக் கலவையினை அடிப்படையாகக் கொண்டு
மனித வளர்ச்சி மற்றும் உடல் திசுக்கள் பராமரிப்பு (Metabolic systerm) முதலியவைகளை மூன்று காரணிகளால் வாதம்-பித்தம்-சிலேத்துமம் என்ற அவைகள் தத்தம் முக்கிய இடத்தில் இருந்து கொண்டே செயலாற்றுகின்றன. இம்மூன்று காரணீயத் தனிமங்களின் விகிதங்கள் சமன்பாடு மாறுபடுகையில் மனித உடல் பெரும் பாதிப்பை அடைகின்றன. இதை திரிதோஷம் என்பார்கள் . இந்த தோஷத்தை அன்னமய கோசம் மூலம் கட்டுப்படுத்துதல் நிகழ்கின்றன. 

எனினும் அம்மூன்றும் தன் ஆதிக்க இடங்களிலிருந்து மற்றோர் இடங்களுக்குச் செல்ல பயணிக்க இயலாது. உடலில் தேவையான இடங்களுக்கு தேவையான போது ,தேவையான விகிதங்களில் சென்று பங்களிக்க முடியாமல் போவதே இதன் குறைபாடுகளாகும். 


“நீருண்ட கார்மேகம் தானே பரவி மழை பெய்விக்க இயலாததும் , அதைக் காற்றின் துணை கொண்டு தக்க விடத்தில் பொழியச் செய்வது போல் “இத்திரிதோஷக் (குறைபாடு) குவியலை இடம் மாற்றி நன்மை பயக்கச்செய்ய, உடல் முழுதும் எடுத்துச்செல்ல பிராண வாயு என்றாகிய உயிர்க்காற்றால் பிராணாயாமத்தால் நேர் செய்ய இயலும் என்பதும் ரிஷிகளின் வாக்கு.


பிராணாயாமத்தால் (மன நலன்கள் பாதிப்பு) களுக்கு காரணமான
“ரஜோ” , “ தமோ” குணங்களையும் முழுதும் நீக்கி “சத்துவ” குணத்தை பிரித்தெடுத்து விளங்கச் செய்ய முடியும் என்பதே யோகத்தின் பிராணாயாமப்
-பொதுவாகும்.

பிராணாயாமத் துவக்க ப்பயிற்சியினை , மூச்சுப்பயிற்சியினை ரேசகம் (வெளிமூச்சு), பூரகம் (உள்மூச்சு ) முதலில் சரியாகச் செய்வதே ஆகும். 


1) நுரையீரலின் காற்றுப்பைகள் அதன் கொள்ளளவு முழுவதும் நிரப்புதல் என்ற செயலை ஒரே சீராக , பரபரப்பின்றி ஒரு கால அளவை நிர்ணயித்துக் கொண்டு (பயிற்சி தருபவரின் சொற்படி) நிகழ்த்துவது பூரகமாகும். 

2) உள்நிரப்பிய காற்றை ஒரே சீராக குறிப்பிட்ட கால அளவில் வெளிவிடுதல் ரேசகமாகும். 

3) ரேசகம், பூரகம் இரண்டையும் வலது இடது மூக்குத்துளைகளில் ஏற்றி இறக்குவது என்பதில், உள்ளிழுத்தலை இடது நாசி மூலமாகவும் , வெளிவிடுதலை வலது நாசி மூலமாகவும் மேற்சொன்னபடி சிறிது காலம் 15 அல்லது 30 நாட்கள் வரை இவ்விதம் பயிற்சி செய்தால் அடிமூக்கின் பின்புறம் நெற்றிப் பொட்டிற்கு உள்ளே ( புருவ மத்திக்கு நேர் கீழ் உள் பகுதியில் ) உள்ள இடங்கலை , பிங்கலை என்ற உணர்வுத் (தட்டுக்கள் /நாடித்தளம்) உணர்வு பெற்று தன் செயலைப் பதிவு செய்யும்.

இதன் பயனாக , உடலில் பிராண ஆதிக்க வாயில் திறப்பதோடு , முக்குணங்களில் ஒன்றான ரஜோ குணவியல்பு படிப்படியாகக் குறையத் துவங்கும். இந்த பயிற்ச்சிக்குப்பின், (ரேசக-பூரத்திற்க்குப்பின்) கும்பகம் என்ற மூச்சு உள் நிறுத்தம் என்ற பயிற்சி தொடருகின்றது . 

கும்பகம் என்றால் அடைத்தல், நிரப்புதல் அசைவற்று இருக்கச்செய்தல் எனப் பொருள்படும். 

உள்ளிழுத்த மூச்சை வெளி விடாதபடி குறிப்பிட்ட கால அளவு நிறுத்தி வைத்தல் ஆகும். 

இக்கும்பகம் என்ற நிகழ்வு மூன்று வகைகளைக் கொண்டதாகும். 

அகக்கும்பகம் 

புறக்கும்பகம்

தம்பனம் 

என்பதாகும். வரிசைக்கிரமத்தில் கூறுகையில் நினைவகம்,முனைவகம்,பூரகம்  கும்பகம், ரேசகம்,என்ற நிலைகளாகப் பின்னப்பட்டதே பிராணாயாமம் ஆகும்.

கும்பகம் செய்கையில் குருவின் வழி காட்டுதல் அவசியம். 



ஒவ்வொரு நிகழ்வும் அமர்க்கை, திசை, காலம், தேசம், படர்க்கை என ஐந்து முகங்கள் கொண்டிருப்பதால் பொதுவான பிராணாயாம நியதிகள் எல்லோருக்கும் பொருந்தத் தக்கதல்ல என்பதே குரு உபதேசமாகும். 

மூச்சுப் பயிற்சியின் நல் விளைவுகளே பிராணாயாமத்தின் உயரிய பலன்கள் ஆகும். 

எனினும் பொதுவான விஷயங்கள் கூட புரியாதிருப்போர்க்கேன்ற இப்பிராணாயாமத்தொடர் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் அமைப்பான மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்திற்கு மறைமுகமாய் சத்குரு இட்ட கட்டளை என்பதாகக்கருதி இவைகள் வெளியிடப்படுகின்றன.

 

 

Source

navigate_next
பிராணாயாமம்

அருளுரை - பிராணாயாமம்-பிரத்யாகாரம்-தாரணை-தியானம்-சமாதி

 ஞான சபை வகுப்புகள் 


யோகவழியிலே சொல்லிக் கொண்டு வருகின்ற போது குறைந்தபட்சம் நாம் உடலில் கண் உறுப்பு எங்கேயிருக்கிறது என்று தெரிய வேண்டாமா.  காது எங்கே என்றால்? அது எனக்குத் தெரியுமே? அது தெரிகிறது அது செய்யும் தவறுகள் தெரியவில்லை. உடலில் பாயு என்று ஒன்று  இருக்கிறது.  அது என்ன பண்ணுகிறது என்று உனக்கு தெரியாது. ஆகவே எந்தெந்த கருவிகளால் லாபமும், நஷ்டமும் ஏற்படுகிறது என்பதை ஆசனத்தின் மூலம்  தெரிந்து கொண்டுவிட்டால், அந்த ஆசனத்தை பயன்படுத்தி நல்லவற்றை ஏற்று, தீயவைகளை அகற்றி, பலத்தைத் தருகிறது. ஆகவே இயமம், நியமம், ஆசனம். அதற்குப் பிறகு ஜீவசக்தி (Vital force) ஏற வேண்டும். அதாவது பிராண சக்தி. பிராண சக்தி என்றால் பிராணாயாமம்.  பிராணாயாமம் என்று சொல்வது மூச்சு விடுதல். மூச்சை ஒழுங்குப்படுத்துதல், எல்லோரும் மூச்சை விட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.






 

ஆனால் ஒழுங்காக மூச்சு விடுகிறோமா என்று கண்காணிக்கத் தெரியுமா?  நம்முடைய உணர்வுகளுக்கு தக்க மாதிரி மூச்சு மாறிக் கொண்டிரு க்கின்றன. ஒவ்வொருவிதமான மூச்சு வந்து கொண்டிருக்கிறது. நாமே உணர்கிறோம். எடுத்துக்காட்டாக அலெக்சாண்டருக்கு எப்போது பிட்ஸ் (வலிப்பு) வரும் என்று தெரியும்.  அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுவான். அந்த உணர்வு பிட்ஸ் வருவதற்கு முன்பே உடலில் ஒரு விதமான மாற்றம் வரும். அதை வைத்துத் தெரிந்துகொண்டு விடலாம். ஆகவே உணர்விலிருக்கும் போதும், சிந்தனை செய்கின்ற போதும் அது உ ங்களுக்குத்தெரியும். பிராணாயாமத்தால்,  எல்லாவற்றிக்கும் ஆதாரமான உயிர்சக்தியினை அதிகப்படுத்தலாம். எந்த சக்தியும் வீணாகாது.

  

பிராணனை சரியான இடத்தில் வைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக (Gain) பலன் கிடைத்துவிடும். பலன் வந்துவிட்டால் இவனுக்கும்  பலத்துக்கும் சம்பந்தமில்லை என்ற அளவிற்கு வந்துவிடும். நோய் என்பது எங்கேயிருக்கிறது என்று தெரியாமல் போய்விடும். 

நோய் என்பது  இரண்டு வகையில் வருகிறது. ஒன்று சூழ்நிலையால், மற்றொன்று கர்மாவினால். சூழ்நிலையால் வருகின்றதைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால்  கர்மாவினால் வருவதை தீர்த்துக் கொள்ள முடியாது, ஆனால் தணித்துக் கொள்ள முடியும். பிராண வாயுவினால் நாளடைவில் பிராணாயாமத்தினால்  குண இயல்புகள் மாறி விடுகின்றன. ஒருவன் ஒழுங்காகப் பிராணாயாமம் செய்தால், எல்லா குணங்களும் நேர்பட்டு விடும். முக்குணங்கள் என்று  சொல்லக்கூடிய ராஜச, தாமச, சத்துவ ஆகிய குணங்களெல்லாம் பிராணாயாமத்தால், நேர் செய்யப் படுகிறது. எல்லாம் ஒருங்கிணைக்கப்படுகிறது.  


அடுத்து பிராணாயாமத்தில் பல உத்திகள், பல வழிகள் உன்னை தியானத்திற்குக் கொண்டு சொல்கிறது. பிராணாயாமம் என்பது (One of factor).


அடுத்து பிரத்தியாஹாரம் என்பது தியானம் செய்வதற்கு அடிப்படையான விஷயம். 

பிரத்தியாஹாரத்தினுள் உன்னுடைய தியானப்பொருளை  வைக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம் என்று பலமுறை உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே நீ தியானப்பொருளைத் தீர்மானித்து அதன்படி செய்து விட்டுப் பிறகு ஒழுங்குபடுத்தி நிறுத்துவது.

 

அடுத்து தாரணை, தியான சித்தி, சமாதி சித்தி, கைவல்ய சித்தி. மிக அழகாக நான்கு வார்த்தைகளிலே யோகத்தை முடித்து யோக முன்னேற்றத்தைச்  சொல்லி விட்டேன். அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர வேண்டும். அப்படி கிடைத்து விட்டால் பேரின்பத்தை அடைய  முடியும். அது அவர்களால் மட்டுமே உணரப்பட்டதாயிருக்கும். பலனை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். 


நீங்கள் சூத்திரங்களைப் படித்தால் மட்டும் போதாது   அதை வாழ்க்கையிலே எவ்வாறு கடைபிடிப்பது, எவ்வாறு நடப்பது, எவ்வாறு கைக்கொள்வது (Apply your life)  அறிந்தால் யோகத்திலே வெற்றி பெற்று விடலாம். அதுவே யோகத்திற்கு (Key) சாவியாக அமையும். யோகச் சித்தியும் வந்துவிடும்.


 ஏற்கனவே  சொன்ன பாடத்தைத்தான் சொல்கிறேன் ஒரு மனிதன் மனிதனாகப் பிறப்பதே பெரும் பாக்கியம். அதில் ஔவை சொன்னது போல் கூன், குருடு,  செவிடு, பேடு நீக்கி பிறப்பது அரிது.  அந்த அளவு இறைவனால் நாம் புண்ணியத்தைப் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்ல அரிய மெய்யன்பர்களின் கூட்டு, ஒருவருக்கு ஒருவர் மிகுந்த பக்தியும், ஆழமான இறைநம்பிக்கையும், பத்துபேர் சேரும் போது ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து  கொள்ளப்படுவர். இதனை உணர்ந்து அந்த நேரத்தில் நல் உணர்வை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இறையை சிந்தியுங்கள், குருவை  வழிபடுங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

 

மானிடப் பிறவியில்  கானகத்திலோ, வெறும் பாலைவனத்திலோ, பனி சூழ்ந்த மலைப்பகுதிகளிலோ, நாம் பிறக்கவில்லை. அங்கே நாம்  வாழவுமில்லை. நம்மை சமதட்பவெப்பச் சூழ்நிலையிலே பிறக்க வைத்திருக்கிறான் இறைவன். ஆகையால் நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க  வேண்டும். அமைதியான சூழ்நிலை கொண்ட நம் தென்னாடு ஒரு ஞானபூமி. நீ நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஞானத்திற்கு அத்தனை வழிகளும்  இங்கிருந்தே கிடைக்கும். ஆனால் யாரும் அதைச் சிந்திக்கவில்லை. நாம் சிந்திக்காத வரை, நம் புகழை நாமே தெரிந்திருக்காத வரை, நம்முடைய  உலகிற்கும், நம்முடைய பகுதிக்கும் என்ன மரியாதையிருக்கிறது. ????? இங்கே என்ன சக்தியிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ளாத வரை,  அதுவரைக்கும் உனக்கு அது கிடைக்காது.

 

உதாரணத்திற்கு மதுரை ஒரு கந்தக பூமி என்று. இவ்வாறு ஒவ்வொரு ஊரும் ஒரு தன்மையைப் பெற்றிருக்கிறது. இங்கு அடிப்படைத் தாதுக்கள் இ ருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றாக  இருக்கிறது. ஆகவே கவலைப்படவேண்டாம். எங்கிருந்தாலும் உன் உடல் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப  மாறிவிடும். எப்படி நாம் துன்பத்திலிருந்து கொண்டு சந்தோஷமாக நம்மை மாற்றிக் கொள்ளவில்லையா? அது போலத்தான். தானம் செய்தும், தனம்  பெற்றும் இந்தப் புண்ணிய பூமியில் சற்குரு பதஞ்சலியின் வாக்கும், ஆசியும் பெற்று, மேலும் மேலும் இந்தப் பிறவியில் ஒரு புண்ணியத்தை  அடைந்தோம். முக்குணங்களின் பரிமாணம், அல்லது பகிர்மானம் நியதியிலே, சத்வ குணங்கள் சேர்ந்து தேவ உடலை உண்டாக்கும் போது அதில்  சத்வ குணம் மேலோங்கியிருக்கும். இது எந்த அளவுக்கு இருந்தால் தேவ சாகரம் கிடைக்குமோ அது கிடைக்கும். ஒரு நந்திகேஸ்வரர் சாதாரண  மனிதராக இருந்து தேவ சாகரம் எடுத்தார் என்பதை   இனி வருங்காலங்களில் கைவல்ய பாதத்தில் நாம் பார்க்க இருக்கிறோம்.

  

ஆகவே நற்செயல்களைச் செய்து பிராரப்த கர்மாவை இந்தப் பிறவியிலே கழித்து, இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஒவ்வொரு குணங்கள்  மேலெழும்புகின்ற போதும் நாம் பாவ, புண்ணியங்கள் செய்ய முற்படுகிறோம். இந்த உலகிலுள்ள எல்லா  ஜீவர்களுக்கும் முக்குணங்களின் கலப்பு இல்லாமல் பிறப்பதில்லை என்று கீதையில் கண்ணன் கூறுகிறார்.

இறையுணர்வை மையப்படுத்தி. புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். அறிவினால் அறிவினை இயக்கி, நல்லறிவு எதுவென அறிந்து, புத்தியி னால் அதைத் தீர்மானித்து, சித்தத்தில் பதிவு பெற்ற எண்ணிலடங்கா தேவையற்ற விஷயங்களை ஒழிப்பதோடு, மேலும் அது போன்ற சித்த விருத்திகளை வளரவொட்டாது, செய்யுங்கள். மேற்சொன்னவைகள் யாவும் இறைவனைச் சேரும் தவிப்பினாலும், வைராக்யம், (திடசிந்தை) பெற்றிருத்தலால் மட்டுமே சாத்தியப்படும். இதற்கு உன்னை தகுதியாக்கிக் கொள்ள தொடர் பயிற்சியினால் மட்டுமே அதனை அடையச் செய்ய முடியும்.

 

சற்குருவாகிய இறைவனின்  மனதில் நீ இடம் பிடிக்க வேண்டுமாயின் உன் தூய்மையான மனத்தை அவரிடம் நிபந்தனை, எதிர்பார்ப்பு இன்றி சரணடையச்செய். அப்போது  அவர் உன்னை அன்புடன் ஏற்றுக் கொண்டு, சாட்சியாக இருக்கும் உன் ஆன்மாவே நீ என்பதை நீயே அகவுணர்வால் அறிந்து விடும்படி,  உன்னை இறைவனோடு சேர்த்து விடுவார். அப்போது தான் உன் பிறவி நோய் விலகி நீ வேறு இறைவன் வேறு என்றில்லாது இணைதல் என்ற யோகம்  கிட்டுகிறது.
 

இவற்றிற்கெல்லாம் சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்திரம் மட்டுமே உதவும்.
 

முயற்சி செய்வாய் - வெற்றி பெறுவாய்
பயிற்சி செய்வாய் பலனடைவாய் 
சத்குரு பாதம் போற்றி போற்றி
- திருச்சிற்றம்பலம்

 

Source

  • All
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7